அதிமுகவில் அருளாணந்தம் சிறிய நிர்வாகியாக இருந்தாலும், எனக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார் பொள்ளாசி வி.ஜெயராமன்.
பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அருளானந்தத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என துணை சபாநாயரும், அதிமுக திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவர், தன்னை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பொள்ளாச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் வசந்த்குமார், சபரிராஜன், சதீஷ், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோரை கைது செய்த சிபிசிஐடி காவல்துறையினர், அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பல இளம்பெண்களை ஏமாற்றி பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும், அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்ததும் தெரியவந்தது. இந்த பாலியல் கொடூர வழக்கு தமிழகத்தையே அப்போது உலுக்கியது.
இந்த வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், சிபிஐ விசாரணையை கையில் எடுத்தது. சிபிஐ கடந்த ஆண்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மேலும் 3 பேர் பிடிபட்டுள்ளனர். பொள்ளாச்சி அதிமுக நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம் (34 ), அவரது கூட்டாளிகள் ஹேரன் பால் (29 ), பாபு (27) ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் இரவோடு இரவாக கைது செய்துள்ளனர். மேலும் 3 சிக்கி இருக்கும் நிலையில், பொள்ளாச்சி நகர அரசியல் புள்ளிகளின் பெயர்கள் மற்றும் புதிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் புள்ளிகளுக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், கட்சிகாரர் என்ற முறையில் கூட்டங்களுக்கு எங்கேயாவது அருளானந்தம் வந்திருக்கலாம் என்றும், அவரை நேற்று முன் தினம், தான் நேரில் பார்த்ததாகவும் கூறிய பொள்ளாசி வி.ஜெயராமன், அதிமுகவில் அவர் சிறிய நிர்வாகியாக இருந்தாலும், எனக்கும் அவருக்கும் மற்றபடி எந்த சம்பந்தமில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.