செங்கல்பட்டு மாவட்டத்தில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு இலங்கை , பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், பர்மா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 நாடுகளில் இருந்து வர்ண நாரை கூழைக்கடா சாம்பல்,நிற கொக்கு, பாம்பு தாரா, கரண்டிவாயன் உள்ளிட்ட 26 வகையான பறவைகள் ஆண்டு தோறும் வருகின்றன.
இதில், 25 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் வரை பறவைகள் வந்த பறவைகளின் வரத்து, கடந்த 10 ஆண்டுகளாக 5000 ஆயிரத்திலிருந்து 10,000 ஆயிரம் வரையாக குறைந்துள்ளது.
இதுகுறித்து அந்தப்பகுதி விவசாயிகள் கூறும் போது, இங்குள்ள விவசாயிகள் வயல்வெளிகளில் அதிக அளவு ரசாயன உரங்கள் பயன்படுத்துவதால் விளைநிலங்களில் வளரும் மண்புழு, நத்தை, நண்டு உள்ளிட்டவை அழிந்து வருகின்றன. அதன் காரணமாக இறைத் தேடி வரும் பறவைகள் திரும்பி விடுகின்றன.
இது மட்டுமன்றி மதுராந்தகம் அருகே உள்ள புதுப்பட்டு பகுதியில் அமைந்துள்ள தனியார் மாத்திரைக் தயாரிக்கும் தொழிற்சாலையின் ரசாயன கழிவு ஏரியில் கலந்து விடுகிறது. அதனால், ஏரிக்கு வரும் பறவைகளுக்கு மலட்டுத் தன்மை ஏற்படுகிறது. ரசாயன உரங்களின் இருக்கும் நச்சுத் தன்மையால் மண்புழு, நத்தை, நண்டுகளுக்கும் பாதிப்பு ஏற்படுவது மட்டுமில்லாமல் மனிதர்களுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்றனர்.
இதனால், கிராமத்திற்கு பெருமை சேர்க்கும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் மீண்டும் பறவைகள் வரத்தை அதிகரிக்க வேடந்தாங்கல் சுற்றியுள்ள விவசாயிகள் இனிமேல் ரசாயன உரத்தை பயன்படுத்துவதில்லை என்று, இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர்.




