ரேஷன் பொருட்களை எளிதில் வாங்கும் வகையில் முதல்வர் செய்துள்ள ஏற்பாட்டை இங்கே பார்க்கலாம்.
இதற்காக மாநில அரசு 539 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதுதொடர்பான நிகழ்வு விஜயவாடாவில் உள்ள பென்ஸ் சர்க்கிளில் நடைபெற்றது.
இதன்மூலம் 1.4 கோடி குடும்பத்தினர் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்சி/ எஸ்டி/ பிசி/ இபிசி மற்றும் சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த 9,260 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், பேசிய முதல்வர் ஜெகன் மோகன்ரெட்டி, பயோமெட்ரிக் முறைகளைப் பயன்படுத்தி ஒளிவு மறைவின்றி ரேஷன் வாகனத் திட்டம் செயல்படுத்தப்படும். அனைத்து மக்களுக்கும் ரேஷன் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும். இதன்மூலம் கள்ளச்சந்தைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
அரிசி வழங்கப்படும் பைகள் மழைநீரால் பாதிக்கப்படாத வகையில் தரமான கவரில் சீல் செய்யப்பட்டு வழங்கப்படும் என்றார். பின்னர் பேசிய சிவில் விநியோகத்துறை அமைச்சர் கோடாளி வெங்கடேஸ்வர ராவ், இந்த திட்டம் ரேஷன் விநியோகத்தில் புதிய புரட்சியை உண்டாக்கும்.
கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட அரிசி, பொதுமக்களால் பயன்படுத்த முடியாத நிலையில்தான் இருந்தது. ஆனால், ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்த பின்னர், தரமான ஸ்வர்ணா வகை அரிசியை அனைவருக்கும் வழங்க ஏற்பாடுசெய்திருக்கிறார்.
இதன்மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் 830 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படுகிறது. இருப்பினும் அதனைப் பொருட்படுத்தாமல் மக்களின் நலனே முதன்மையானது என்பதில் எங்கள் அரசு உறுதியாக இருக்கிறது. நாங்கள் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.