கொரோனா நோய் தொற்றால் பள்ளிகள் கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டு இருக்கிறது.கடந்தாண்டு, மார்ச், 25 முதல், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், 10,12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற இருப்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது பற்றி கல்வித்துறை ஆலோசித்து வந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த 6, 7 மற்றும் 8ஆம் தேதிகளில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோரிடம் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன. பெற்றோர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலேயே பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பெரும்பாலான பெற்றோர்கள், பள்ளிகளை திறக்க ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்ததின்படி நாளை முதல் பள்ளிகள் திறக்க முடிவு செய்து ஏற்கனவே அறிக்கை வெளியிடப்பட்டது.
பள்ளிகள் திறக்கும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், முன்னேற்பாடுகள் குறித்தும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளாகவும் வெளியிட்டது.
அந்த வகையில் பள்ளிக்கு மாணவர்கள் வருகையை கட்டாயப்படுத்த கூடாது. விருப்பத்தின் பேரில் பெற்றோரின் இசைவு கடிதம் பெற்று மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து, சென்னையில் உள்ள ஷெனாய் நகரில் இருக்கும் திருவிக மேல்நிலைப்பள்ளிக்குச் சென்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாணவர்கள் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம்.
உடல்வெப்ப பரிசோதனைக்கு பிறகே வகுப்புகளில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.