மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி, மெரினா கடற்கரையில் இருக்கும் எம்.ஜி.ஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. அங்கேயே ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கவும் தமிழக அரசு முடிவு செய்தது.
கடந்த 2018-ஆம் ஆண்டு மே 8-ஆம் தேதி நினைவிடம் அமைக்க தேவையான நிதியை ஒதுக்கி கட்டுமானப்பணியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து சென்னை மெரீனாவில் 50,422 சதுர அடி பரப்பளவில் ரூ.80 கோடி செலவில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டப்பட்டது. இந்தநிலையில், பணிகள் முழுவதுமாக முடிவடைந்து, இன்று காலை 11 மணி அளவில் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைத்தார்.
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் உடன் இருந்தனர். தொடர்ந்து, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இன்று மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பையொட்டி, மெரீனாவில் கொரோனா அச்சத்தையும் மீறி, அதிமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.
போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் இருந்து கண்ணகி சிலை வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி முடியும் வரை இந்த தடை நீடிக்கும். எந்த வாகனமும் அனுமதிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.





