கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு லேசாக பக்கவிளைவுகள் சுமார் 447 பேருக்கு ஏற்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அவசர கால நடவடிக்கையாக அனுமதியளித்தது. இதனையடுத்து, ஜனவரி 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த இரு நாட்களில் மட்டும் 2 லட்சத்து 24 ஆயிரத்து 301 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 16ஆம் தேதி மட்டும் 2 லட்சத்து 7 ஆயிரத்து 229 பேருக்கும், ஜனவரி 17ஆம் தேதி, 17 ஆயிரத்து 702 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு, லேசான பக்கவிளைவுகள், இதுவரை 447 பேருக்கு ஏற்பட்டதாகவும், அதில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை தேவைப்பட்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் குமட்டல் ஆகிய பிரச்னைகள் மட்டுமே இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.