பொள்ளாச்சி, ஜன.29
அதிர்ஷ்ட கற்கள் விற்பனை மோசடியில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த 19 பேர் கும்பலையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்தை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 22 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
பொள்ளாச்சி அடுத்த குமரன்நகரைச் சேர்ந்தவர் ரியாஸ்(30). இவர் வியாரம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்துவருகிறார். ரியாஸின் முன்னாள் நண்பர்கள் உசிலம்பட்டியை சேர்ந்த மூக்கையா, திண்டுக்கல்லை சேர்ந்த ராஜ்குமார், திருப்பூரைச்சேர்ந்த அம்பாலம்மந்திரி ஆகியோரை வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி பெருமாள் செட்டி வீதியில் சந்திக்கிறார்.
நண்பர்கள் தங்களை பற்றி ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு தங்களின் தொழில்கள் குறித்து பேசியுள்ளனர். அப்போது, பொள்ளாச்சியை சேர்ந்த ரியாஸிடம் அவரது நண்பர்கள் மூன்று பேரும் நாங்கள் அதிர்ஷ்ட கற்கள் விற்பனையில் ஈடுபட்டுவருவதாகவும், அதிர்ஷ்ட கற்களை வீட்டில் வைத்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தருகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ரியாஸ் தன்னிடம் உள்ள ரூ.5 லட்சத்தை எடுத்துக்கொண்டு பொள்ளாச்சி-மீன்கரை சாலையில் உள்ள குஞ்சிபாளையம் பிரிவில் உள்ள மயானத்திற்கு செல்கிறார். அங்கு அவருடைய நண்பர்கள் மூன்று பேரும் செல்கின்றனர். அங்கு வைத்து ரியாஸிற்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதிர்ஸ்ட கல்லை காண்பித்தால்தான் பணம் தருவதாக ரியாஸ் தெரிவித்துள்ளார்.
இதைப்பார்த்த பொதுமக்கள் நான்குபேரையும் பிடித்து பொள்ளாச்சி மேற்கு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் மூக்கையா, ராஜ்குமார், அம்பால்மந்திரி ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், இவர்களுடன் கேரளாவை சேர்ந்த 19 பேர் தொடர்பில் இருப்பதும், அவர்கள் பொள்ளாச்சி வந்து மோசடி செய்ய முயற்சித்ததும் தெரியவந்தது.
கேரளாவை சேர்ந்த 19 பேர் கொண்ட கும்பல் அதிர்ஷ்ட கல் மோசடியில் பல இடங்களில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. கேரளாவை சேர்ந்த கும்பல் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பதுங்கி இருந்தபோது போலீஸார் அவர்களை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.


