இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்திலும் பல்வேறு தளர்வுகளுடன் இதுவரை 5 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தற்போது சென்னையில் மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், 4-வது ஞாயிற்று கிழமையான இன்று எந்தவித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் வேளையில் வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா?, தளர்த்துவதா? என்பது குறித்து கருத்து கேட்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29ம் தேதி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
கொரோனா பரவலை தடுக்க மேலும் பல மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுமா? என்பது இந்த ஆலோசனைக்கு பிறகு தெரியவரும் என்றும் மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.