கோவையில் மதுபானம் கலந்த ஐஸ்கிரீம் விற்பனை படு ஜோர்...!
கோயம்புத்தூர் அக்.21.,
கோயம்புத்தூர் அவினாசி சாலையிலுள்ள லட்சுமி மில்ஸ் பகுதியில் தனியார் வணிக வளாகம் ஒன்றில் ரோலிங் டப் கபே (Rolling Dough Cafe) என்ற ஐஸ்கிரீம் கடை இயங்கி வந்தது.
இந்தக் கடையில் மதுபானம் கலந்த ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் பதின் பருவ வயதினர் அதிகளவில் இந்த கடைக்கு வருவதாகவும் புகார் எழுந்தது.
இந்தப் புகாரைத் தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தமிழ் செல்வன் தலைமையிலான குழு இன்று கடையில் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் மது பாட்டில்கள் மற்றும் காலாவதியான உணவு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
![]() |
| மதுபானம் கலந்த ஐஸ்கிரீம் விற்பனை செய்த கடைக்கு சீல் |
மேலும் கடையில் உணவு கையாளுபவர்கள் உரிய மருத்துவ தகுதி சான்று பெறப்படவில்லை, உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரமின்றி இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் கடையின் உரிமத்தை ரத்து செய்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கடைக்கு சீல் வைத்தனர்.



