பேருந்தில் திடீரென ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, கண்ணகி நகர் பகுதியில் அரசு பேருந்தில் ஏறி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் முகக்கவசம், தகுந்த இடைவெளியை கடைபிடிக்குமாறு பயணிகளிடம் அறிவுறுத்தினார்.
சென்னை அக்.23.,
தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் 6-வது நாளாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், சென்னையில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணகி நகர், பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொண்டு வரப்படும் தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து பொதுமக்களிடம் பேசினார்.
இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து தலைமை செயலகம் புறப்படும் முன்னர், கண்ணகி நகர் செல்லும் பேருந்தில் எறி, திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகளிடம் பேருந்துகள் சரியான நேரத்தில் வருகிறதா, போதுமான வசதி உள்ளதா கூடுதல் வசதிகள் தேவைப்படுகிறதா என மக்களின் குறைகளை முதலமைச்சர் கேட்டறிந்தார்.
மேலும், பேருந்தில் பெண்களுக்கு இலவச டிக்கெட் முறையாக வழங்கப்படுகிறதா என பெண் பயணிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, பேருந்தில் இருந்த பயணிகளுடன் செல்பியும் எடுத்துக்கொண்டார்.
இதையடுத்து, திடீரென பேருந்தில் ஏறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தது அதிகாரிகள் மட்டுமல்லாது, அப்பகுதி மக்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியது.