சசிகலா குறித்து எடப்பாடியின் கருத்து; எடப்பாடி பழனிசாமி உருவ பொம்மையை எரிக்க அதிமுகவினர் முயற்சி
திருநெல்வேலி அக். 22.,
சசிகலா குறித்து அவதூறு பரப்புவதாக கூறி திருநெல்வேலியில் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுகவின் பொன்விழா ஆண்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பெயருடன் சசிகலா அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்து தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பின் போது எதிர்ப்பினை தெரிவித்ததோடு, சசிகலா குறித்த பல்வேறு தகவல்களையும் கூறினார்.
அதேபோன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் சசிகலா குறித்தும், அவரின் நடவடிக்கை குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவர்களின் இந்த நடவடிக்கையை கண்டித்து திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஆதரவாளர்கள் அதிமுக கொடியுடன் வந்து எடப்பாடி பழனிச்சாமியின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர்.
இதைகண்டு சுதாரித்துக் கொண்டு ஓடிவந்த காவல்துறையினர் உருவபொம்மையை அவர்களிடமிருந்து கைப்பற்ற முயன்றனர். இதனால் காவல்துறையினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து உருவபொம்மையை கைப்பற்றிய காவல்துறையினர், அதனை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஆதரவாளர்கள் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதோடு, சசிகலாவிற்கு ஆதரவாக கோஷமிட்டனர்.


