சசிகலாவை ஹைதர் அலி சந்திக்கவிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் தமமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பொதுச் செயலாளர் ஆவார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களத்தில் பல திருப்பங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. முக்கிய கட்சிகளுடன் கூட்டணியில் இருப்பார்கள் என்று எதிர்பார்த்த கட்சிகள் எல்லாம் கூட்டணியை விட்டு வெளியேறிக்கொண்டு இருக்கிறது. இப்படியான பரபரப்பான சூழலில், திமுக கூட்டணியில் இருக்கும் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதை அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா ஏற்றுக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்.
இதையடுத்து, மமகவின் முக்கிய அங்கமான தமமுக, இந்ததொகுதி பங்கீட்டை ஆதரிக்க மறுக்கிறது. இஸ்லாமிய மக்களின் பேராதரவை பெற்றிருக்கும் மமகவுக்கு வெறும் 2 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படுவது குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தமமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஹைதர் அலியை சசிகலா சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
இந்தநிலையில், இஸ்லாமிய மக்களின் வாக்குகளை தன்பக்கம் இழுக்க திமுக முனைப்பு காட்டிக் கொண்டிருக்கிறது. இந்தசூழலில் அக்கட்சிகளுக்கு பேச்சுவார்த்தையில் முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், சசிகலா ஹைதர் அலியை சந்திப்பது முஸ்லீம் வாக்குகளை சிதறடிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. சசிகலாவை தொடர்ந்து ஹைதர் அலி டிடிவி.தினகரனையும் சந்திக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



