சசிகலா கொரோனாவிலிருந்து விடுதலையாகி வெளியே வந்த நொடியிலிருந்தே அரசியல் அரங்கம் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
பெங்களூர் மருத்துவமனையிலிருந்து நேற்று வெளியே வந்த சசிகலா, பத்திரிகையாளர்களை சந்திக்கவோ, தனது கருத்துகளை தெரிவிக்கவோ இல்லை. ஆனால், சசிகலா ஒரு பெரிய அரசியல் செய்தியோடுதான் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்துள்ளார்.
சிறையில் இருந்தபோது உடல்நிலை பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் சசிகலாவின் புகைப்படம் வெளியானது. 66வது வயதில் இருக்கும் சசிகலாவுக்கு, ஏற்கெனவே நீரிழிவு நோய் உள்ளிட்ட பிரச்சினை இருக்கும் போது எப்படி அரசியலில் பரபரப்பாக இயங்க முடியும் என ஒரு சாரார்கள் கேள்வி எழுப்பினர்கள்.
ஆனால், சில தினங்களாக சசிகலாவின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை, சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
நேற்று, சசிகலா மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுபோது சிறிது தூரம் சக்கர நாற்காலியில் வந்த அவர், பின் தாமாக படிகளில் நடந்துவந்து காரில் ஏறினார். இதன்மூலம், தான் நன்கு குணமடைந்து வருகிறேன், விரைவில் முன்புபோல் இயங்குவேன் என்று சசிகலா சொல்லாமல் சொல்வதாக கூறுகிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள்.
இன்னமொரு கூடுதல் தகவலாக, சசிகலாவுக்கு எதிராக அரசியல் செய்பவர்களுக்கும் சசிகலா ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார். சசிகலா அதிமுகவில் இணைய 100 சதவீதம் வாய்ப்பே இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமாரிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரை கூறியிருந்தனர்.
ஆனால், நேற்று சிகலாவோ மருத்துவமனையிலிருந்து ஜெயலலிதா பயன்படுத்திய காரிலேயே தனது பயணத்தை தொடங்கியிருக்கிறார்.
அத்தோடு, ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுகவின் கொடி பறக்க, வாகனம் பெங்களூர் வீதிகளில் வலம்வந்தது. அதிமுகவில் சசிகலா இல்லை என்று கூறுபவர்களுக்கு பதிலளிக்கும் விதமாகவே இந்த நகர்வை பார்க்கப்படுகிறது. வரும் நாள்களில் அரசியல் ஆட்டம் உச்சகட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.







