கோவை: பட்டா பெயர் மாற்றத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற நில அளவையாளர், ஓய்வு பெற்ற ஊழியர், இவர்களுக்கு உதவிய முகவர் உள்ளிட்ட மூன்று பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கோவை ஒண்டிபுதூர் பகுதிகை சேர்ந்த ஓய்வு பெற்ற ஊழியர் நாகராஜன்(62). இவரது மனைவி சுமதி. நாகராஜன் தனது மனைவியின் பெயரில் அதே பகுதியில் மூன்று மனைகளை வாங்கியுள்ளார். பத்திரபதிவிற்காக சிங்காநல்லூர் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பம் செய்ந்திருந்த நாகராஜன் இந்த அலுவலகத்தில் நில அளவையாளராக பணிபுரியும் நிர்மல்குமாரை அணுகியுள்ளார். இரண்டு மாதங்களாகியும் பட்டா பெயர்மாற்ற பரிந்துரை செய்யாமல் நிர்மல்குமார் இழுத்தடித்த நிலையில், நேற்று மாலை மாநகராட்சி அலுவலகத்திற்கு நிர்மல்குமாரை காண வந்த போது நிர்மல்குமார் அங்கு இல்லாததால் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
நிர்மல்குமார் தொடர்பு கொண்டு பேசிய போது அந்த அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நடராஜன் என்பவரிடம் பெற்று கொள்ளுமாறு கூறியுள்ளார். பட்டா மாற்ற பரிந்துரைக்கு 2000 வீதம் 6000 ரூபாய் கொடுக்க சொல்லி அளவையாளர் கூறியதாக நடராஜன் தெரிவித்துள்ளார். தன்னிடம் தற்போது பணமில்லை என்று கூறிய நாகராஜன் பட்டா பெயர் மாற்றத்திற்கான ஆவணங்களை கொடுத்து விட்டு காலையில் வந்து பணம் தருவதாக கூறி பட்டா மாற்ற பரிந்துரையை பெற்று நாகராஜன் சென்றுள்ளார். லஞ்சம் தர மனமில்லாத காரணத்தால் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். மறுநாள் கிழக்கு மண்டல மாநகராட்சி அலுவலகம் சென்று நிர்மல்குமாரிடம் பணம் கொடுக்க முயன்றபோது அதனை நடராஜனிடம் கொடுக்கும் படி கூறியுள்ளார்.
பணத்தை நடராஜன் பிரதீப்குமார் என்பவரிடம் தருமாறு கூறியுள்ளார். ரசாயனம் தடவிய பணத்தை பிரதீப்குமார் என்ற ஏஜெண்ட்டிடம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் கண்காணிப்பாளர் கணேஷ், ஆய்வாளர் கலையரசி, ஆறுமுகம் ஆகியோர் கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில் பிரதீப் குமாரை நில அளவையாளர் நிர்மல்குமார் தனது சொந்த தேவைகளுக்காக ஏஜெண்ட் ஆக பலவருடங்களாக பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அதனைதொடர்ந்து பிரதீப்குமார் அளித்த வாக்குமுலத்தின் அடிப்படையில் மூவரும் கைது செய்யபட்டனர்.

