தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே குடியரசு தின விழாவில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவியிருந்த நேரத்தில் முன்கள பணியாளராக பணி செய்த தூய்மைப் பணியாளரை தேசியக் கொடி ஏற்றவைத்து கவுரவப்படுத்தியிருக்கிறார் இருளப்பட்டி பஞ்சாயத்து தலைவர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்டது இருளப்பட்டி ஊராட்சி. இருளப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று 72வது குடியரசு தினவிழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் குமார் தலைமையில், தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆனால், தலைவர் தேசியக் கொடியை ஏற்றாமல், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை தூய்மைப் பணியாளரை கவுரவப்படுத்தும் வகையில், பழனியம்மாள் என்பவரை தேசியக் கொடியை ஏற்றி வைத்து கொடிக்கு வணக்கம் செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சி பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இருளப்பட்டி ஊராட்சியில் இருக்கும் 10 தூய்மை பணியாளர்கள், கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணியில் சிறப்பாக பணியாற்றியதால் இப்பகுதியில் ஒருவருக்கு கூட தொற்று ஏற்படாதது குறிப்பிடத்தக்கது.