குன்னூர் அருகே 17 வயது மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு, உதகை மகளிர் நீதிமன்றத்தில் 44 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதுவே உச்சபட்ச தண்டனையாக கருதப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு அடுத்துள்ள வெலிங்டன் ஜெயந்தி நகரைச் சேர்ந்தவர் ஆண்டனி வினோத் வயது 34. இவர் ஏற்கெனவே திருமணமானவர். சமையல் கலைப் படிப்பு முடித்து வேலை தேடி வந்துள்ளார். இந்தநிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்புப் படித்த மாணவியைத் திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் கர்ப்பமான, மாணவியின் கருவைக் கலைக்க மாத்திரைகள் கொடுத்து கருக்கலைப்பு செய்துள்ளார். இதையடுத்து, மீண்டும் திருமண ஆசை வார்த்தை கூறி, தொடர்ந்து கருக்கலைப்பு செய்துள்ளார். இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவி, பெற்றோருடன் உதகமண்டலம் சென்று அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீசார், மைனர் பெண்ணை ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்த ஆண்டனி வினோத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி அருணாசலம், ஆண்டனி வினோத்துக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
இதுகுறித்து அரசு வழக்கறிஞர் மாலினி பிரபாகர் கூறும் போது, 'போக்சோ' சட்டத்தில் வழங்கப்பட்டதில் இதுதான் அதிகபட்ச தண்டனை. வேறு எங்கும் இத்தனை ஆண்டுகள் தண்டனை வழங்கப்படவில்லை. மைனர் பெண்ணின் கருவைச் சேகரித்து அதை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தி நிரூபித்ததை அடுத்து இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


