Type Here to Get Search Results !

என்னை மன்னிக்கவும்... நான் கட்சி துவங்க போவதில்லை - ரஜினி

எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு, தான் கட்சி துவங்கவில்லை என்றும், அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்வதாகவும் நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.



நடிகர் ரஜினிகாந்த் உறுதியாக அரசியலுக்கு வருவதாகவும், கட்சி துவக்கம், கொடி உள்ளிட்ட அறிவிப்புகள் குறித்து வரும் டிசம்பர் 31ஆம்  தேதி அறிவிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.  இதற்கிடையில் உடல்நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பிய ரஜினியிடம், கட்டாயம் ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த சூழ்நிலையில், தான் அரசியல் கட்சி துவங்கப்போவதில்லை என இன்று அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக ரஜினி தனது டுவிட்டரில் வெளியிட்ட அறிவிப்பு:




என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம். ஜனவரியில் கட் தொடங்குவேன் என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஐதராபாத் சென்றேன். கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக்குழுவினருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்து கட்டுப்பாட்டோடு இருந்தும் 4 பேருக்கு கொரோனா இருக்கிறது என்று தெரியவந்தது. உடனடியாக  இயக்குனர் படப்பிடிப்பை நிறுத்தி, என்னை  உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வித்தார்.


எனக்கு கொரோனா நெகடிவ் வந்தது. ஆனால் எனக்கு இரத்தக் கொதிப்பில் அதிக ஏற்றத் தாழ்வு இருந்தது. மருத்துவ ரீதியாக எக்காரணத்தைக் கொண்டும் எனக்கு இரத்தக் கொதிப்பில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது. அது என்னுடைய மாற்று சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கும். ஆகையால் என்னுடைய மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர்களின் மேற்பார்வையில் மூன்று நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது.


என் உடல்நிலையை கருத்தில்கொண்டு படத்தின் தயாரிப்பாளர்அவர்கள் மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்திவைத்தார். இதனால் பல பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பதோடு பல கோடி ரூபாய் நஷ்டம். நடந்தவை  அனைத்துக்கும் என்னுடைய உடல் நிலையே  காரணம்.  இதை ஆண்டவன் எனக்கு கொடுத்த ஒரு எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன். நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள் மூலமாக, சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது என்பதும் உண்மை.


இதை யதார்த்தத்தை அரசியல் அனுபவம் வாய்ந்த யாரும் மறுக்கமாட்டார்கள். நான் மக்களை சந்தித்து பொதுக் கூட்டங்களை கூட்டி, பிரச்சாரத்திற்கு சென்று ஆயிரக்கணக்கான ஏன் லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டியிருக்கும். 

தற்போது  இந்த கொரோனா உருமாறி புது வடிவம் பெற்று இரண்டாவது அலையாக வலம்வர தொடங்கியுள்ளது. என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என சொல்லிவிட்டு  இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நான்கு பேர் நான்கு விதமா என்னை பற்றி பேசுவார்கள் தூற்றுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.



அதனால் நான் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். இதை தெரிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies