பொள்ளாச்சி. நவ. 17
பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சி.மலையாண்டிபட்டிணம் ஊராட்சியில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தலைவர், துணை தலைவர் மற்றும் 6 வார்டு உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளாக உள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று பல மாதங்களாகியும் அதிமுகவை சேர்ந்த தலைவர் மயில்சாமிக்கும், பாஜகவை சேர்ந்த துணை தலைவர் ரவி என்பவருக்கும் சரியான புரிந்துணர்வு இல்லாததால் சி.மலையாண்டிபட்டிணத்தில் எவ்வித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளும் பொதுமக்களுக்கு சென்று சேரவில்லை என்று புகார் உள்ளது. அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லாததால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் செவ்வாய்க்கிழமை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கோமங்கலம் போலீசார் ஊராட்சி பிரதநிதிகளிடமும், பொதுமக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தலைவர் தலைமையில் கூட்டம் நடத்தி தீர்வு காண பொதுமக்கள் கூறினர்.
அதை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் வளர்ச்சி பணிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிப்பதென முடிவு செய்யப்பட்டது.