பொள்ளாச்சி, நவ.23
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பணியின்போது பாம்பு கடித்து உயிரிழந்த வேட்டை தடுப்பு காவலர் குடும்பத்திற்கு திங்கள்கிழமை ரூ.5 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.
ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வந்தவர் சந்திரன். இவர் கடந்த 2016ம் ஆண்டு ஆழியாறு பகுதியில் பணியில் இருந்துபோது பாம்பு கடித்து உயிரிழந்தார்.
உயிரிழந்த சந்திரன் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகை ஏதும் வழங்கப்படாமல் இருந்துவந்தது. இந்நிலையில், பொள்ளாச்சி வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியரிடம் உயிரிழந்த சந்திரனின் மனைவி கலையரசி நிதியுதவி கேட்டு கோரிக்கை வைத்தார். கோரிக்கையை பரிசீலித்த மாவட்ட வன அலுவலர் வனத்துறையினருக்கு காப்பீடு எடுக்கப்பட்டிருந்ததையும், அதில் காப்பீட்டு தொகை வழங்கப்படாமல் இருப்பதையும் அறிந்துகொண்டு காப்பீட்டு நிறுவனத்திடம் பேசி ரூ.5 லட்சம் காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுத்தார்.
இதையடுத்து, திங்கள்கிழமை சந்திரனின் மனைவி கலையரசியிடம் ரூ.5 லட்சம் காப்பீட்டு நிறுவனம் மூலம் தொகை வழங்கப்பட்டது. நிகழ்வில், ஆனைமலை புலிகள் காப்பக தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன், மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர், உதவி வனப்பாதுகாவலர் செல்வம், வனச்சரக அலுவலர் புகழேந்தி ஆகியோர் இருந்தனர்.