"மக்களின் உயிரை, உணர்வை மதிக்காத அரசு "- சீறும் கமல்
காவல்துறையின் அத்துமீறல்களை அனுமதித்து, பெயரளவில் நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசு, அரச பயங்கரவாதத்தை அனுமதித்து, ஆதரித்து, வளர்த்து வருவதாக மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளத்தில், போலீசாரின் தாக்குதலுக்கு, இரு வியாபாரிகள் இறந்ததை கண்டித்து, மக்கள் நீதி மையம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை:
ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகிய இருவரின் மரணமும் அதனை சுற்றி நிகழ்ந்திருக்கும் மனித உரிமை மீறல்களும், சட்ட மீறல்களும் நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம் என்ற அச்சத்தை விதைத்திருக்கிறது. ரத்தம் சொட்ட சொட்ட இருவரை தாக்கும் மூர்க்கத்தனம் கொலைபாதகக் குற்றம்.
அதை செய்தவர் யாராக இருந்தாலும் அந்த தவறுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற குரல்களுக்கு இடையில் இரு காவல் உதவி ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதை பார்க்கையில், அரசு இந்த விஷயத்தில் துளி கூட உண்மைத்தன்மையை கண்டறிய முயலவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இரு காவல் உதவி ஆய்வாளர்கள் நினைத்தால், இரு கைதிகளை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து சிறைச்சாலைக்கு மாற்றி விட முடியுமா? அப்படி செய்ய எத்தனை துறைகள் அவர்களுக்கு உதவியிருக்க வேண்டும், எத்தனை பேர் உடனிருந்திருக்க வேண்டும்? ஆனால் பெயரளவில் எடுக்கப்படும் நடவடிக்கை எதற்கும் உதவாத ஒன்று என அரசுக்கு புரியவில்லையா?
இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியும், நிவாரணமும் தேவை தான். ஆனால் அதை மட்டும் அவசரமாக அறிவித்து விட்டு இந்த கொலைகளை முதல்வர் கடந்து விடக்கூடாது. நிதியுதவியை விட இரண்டு உயிர்களுக்கு நீதி தேவை. இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். காவல்துறையின் அத்துமீறல்களை அமைதியாக வேடிக்கை பார்த்து, உயிரிழப்புகளின் போது பெயரளவில் நடவடிக்கை எடுத்து அமைதி காக்கும் அரசு, அரச பயங்கரவாதத்தை, அனுமதித்து, ஆதரித்து, வளர்த்து வருகிறது.
மக்களாட்சி என்பதை மறந்து அதிகாரத்தை, ஆதிக்கத்தை, அநீதியை மக்கள் மேல் இந்த அரசு தொடர்ந்து கட்டவிழ்க்கிறது. மக்களின் உயிரை, உணர்வை, உரிமைகளை, சட்டத்தை மதிக்காத அரசு அகற்றப்பட வேண்டும். சட்டம் மக்களுக்கானது, மக்களை காப்பதற்கு எனும் போது, நீதித்துறை மக்களுடன் நிற்க வேண்டும்.
இந்த அடிமை அரசின் ஆணவத்தை, இந்த இருவர் மரணத்திற்கு நீதி கேட்கும் நம் குரல் அசைந்து பார்க்கட்டும். இனி எந்த ஒரு உயிரும் பாதிக்கப்படாமல் இருக்க இதை செய்ய வேண்டியது நம் கடமையாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.