தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, அதிக வாகனங்களில் ஊர்வலமாக வந்ததால், தடுத்து நிறுத்திய டிஎஸ்பியுடன் மருது சேனை அமைப்பினர் வாக்குவாதம் செய்தனர்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை தேர்தலில் தோற்கடித்து, திருமங்கலம் தேவர்சிலை சுவற்றில் கட்டிவைப்பேன் என அமமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஆதிநாராயணன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியில், அதிமுக சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் மகன் மணிமாறன் திமுக சார்பிலும் மற்றும் அமமுக கூட்டணிக் கட்சியான மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதையடுத்து, மருதுசேனை அமைப்பின் சார்பில் போட்டியிடும் ஆதிநாராயணனுக்கு, திருமங்கலத்தில் மருது சேனை அமைப்பு மற்றும் அமமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்பாளர் அதிகமான வாகனங்களில் புடைசூழ ஊர்வலமாக வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மருது சேனை அமைப்பினரை திருமங்கலம் டிஎஸ்பி வினோதினி தடுத்து நிறுத்தினார். இதனால், மருது சேனை அமைப்பினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சர் உதயகுமாரின் தூண்டுதலின் பேரில். காவல்துறை தடுத்து நிறுத்துவதாககூறி, உதயகுமார் ஒழிக... எனவும் காவல்துறை ஒழிக... என கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் போலீசார் சமாதானம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர். இதையடுத்து, திருமங்கலத்திலுள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்த மருது சேனை வேட்பாளர் ஆதிநாராயணன், தொண்டர்களிடையே பேசும்போது, முக்குலத்தின் துரோகியான உதயகுமாரை தோற்கடித்து திருமங்கலம் தேவர் சிலை சுவற்றில் கட்டி வைப்பேன். அவரை வந்து அழைத்துச் செல்ல, தைரியம் உள்ளவர்கள் வந்து அழைத்துச் செல்லலாம் என்று ஆவேசமாக பேசினார்.
இதையடுத்து, வேட்பாளர் செய்தியாளர்களை அளித்த பேட்டியில், இந்த தொகுதியின் அமைச்சர் 5,000 கோடிவரை ஊழல் செய்திருப்பதாகவும், அதனை லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்ய வேண்டும். இந்தத் தொகுதியின் அமைச்சராக இருக்கும் ஆர்.பி.உதயகுமார் இந்த தொகுதிக்கான வளர்ச்சித் திட்டங்கள் எதையும் செய்யவில்லை, எனவும் நாங்கள் வெற்றி பெறும்பட்சத்தில் தொகுதியில் அதிகப்படியான வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்.
மேலும், மருது சேனையின் ஆதரவால் தென்மாவட்டங்களில் 20 தொகுதிகளில் கைப்பற்றுவோம் என பேசிய வேட்பாளர் ஆதிநாராயணன், ஆளும் கட்சியினர் அதிக வாகனங்கள் வருவதை கண்டுகொள்ளாத காவல்துறையினர், எங்களை வேண்டுமென்றே தடுத்து நிறுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.


